டெல்லி: ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.   மற்றொரு வீரரான லக்ஷ்மனும் மீண்டும் குழு உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டின் உலகளாவிய நிர்வாகக் குழு  தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று (ஏப்ரல் 13ந்தேதி) நடைபெற்ற கூட்டத்தில்,   மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டி முன்னாள் கேப்டனான கங்குலி, 2000 முதல் 2005 வரை ஐந்து ஆண்டுகள் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியவர். ,2021 ஆம் ஆண்டு முதன்முதலில் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். 52 வயதான சவுரவ் கங்குலி,  இதுவரை இந்த கமிட்டின் தலைவராக பதவி வகித்து வந்த  அனில் கும்ப்ளேவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.