டெல்லி: தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில்  (இபிஎஃப்) உள்ள பணத்தை இனி 100% முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி,  இபிஎஃப்ஓ நிலுவைத் தொகையில் 100% வரை திரும்ப பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம்  தொழிலாளர்கள் பெறக்கூடிய மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்களும், அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் சரிசம அளவில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தி வருகின்றனர். இந்த நிதிக்கு கணிசமான அளவில் வட்டி கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தில்,  நாடு முழுவதும் சுமார்  8 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் அவர்களின் குடும்பங்கள்  பயனடைந்து வருகின்றனர்.

இந்த வைப்பு நிதியில்,  திருமணம், கல்வி, வீடு வாங்குவது, மருத்துவ செலவுகள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மட்டும்  சேமிக்கப்பட்டுள்ள பணத்திலிருந்து குறிப்பிட்ட அளவில் தொகையை தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.  அதாவது,  தற்போதைய விதிகளின்படி அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரையில் வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக எந்தவொரு இடைத்தரகரையும் நாட தேவையில்லை.  இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்தால் 2 அல்லது 3 வேலை நாட்களுக்குள் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணம் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.

இந்த சேவை நவீனப்படுத்தும் நடவடிக்கை  நடைபெற்று வந்தது.  தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்தி உள்ளது.   அதன்படி இனி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ளபடி, தொழிலாளர்கள் தங்களது வைப்பு நிதியிலிருந்து அதிகபட்சம் 75 சதவீதம் வரை தொகையை திரும்பப் பெற முடியும் என்ற நிலையை உயர்த்தி இனி 100 சதவீதம் அதாவது முழுமையாக தங்களது வருங்கால வைப்பு நிதி வைப்பு நிதியை திரும்பப் பெற முடியும்.

பணம் எடுக்கும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி திருமணம் மற்றும் கல்விக்காக பகுதி பணம் எடுக்க மொத்தம் 3 முறை அனுமதிக்கப்ப ட்டிருந்தது.  இனி கல்விக்கு 10 முறை வரையிலும், திருமணத்திற்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும்..

அதேபோல முன்னதாக பிரத்யேக சூழல்களில் பணம் எடுப்பதற்கான காரணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது புதிய வகைப்பாட்டிற்குட்பட்டு பணத்தை எடுக்க எந்தவித காரணம் குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.

அதே நேரத்தில் உறுப்பினர்கள் எப்போதும் தங்களது கணக்கில் 25 சதவீதம் குறைந்தபட்ச சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.