டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத்துக்கு பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 8ந்தேதி) மதிய விருந்தளித்தார். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த அவரை டெல்லி பாலம் விமான நிலையத்தில், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார்.
டெல்லியில் பிரதமர் மோடி உள்பட சிலரை சந்தித்து பேசிய ரஷீத், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மும்பை செல்கிறார். அங்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை தொழிலதிபர்களை சந்தித்து கட்டமைப்பு, எரிசக்தி, நிதிதொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், எஇந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் ஆற்றிய முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். “இந்த சிறப்பு வருகை எங்கள் ஆழமான வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது மற்றும் எதிர்காலத்தில் இன்னும் வலுவான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
துபாய் இளவரசரின் வருகை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘ துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவரது பயணம், இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் உறவில் மிக முக்கியமானது’’ என குறிப்பிட்டுள்ளார்.