டில்லி

ந்தியாவில் 44% சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலச் சட்டசபைகள், மற்றும் ஒன்றியம் பிரதேசங்களில் பதவியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து, ஆய்வு செய்தது. ஆய்வில் இந்தியா முழுவதும் 44 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு 28 மாநிலச் சட்டசபைகள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் 4,033 சட்டமன்ற உறுப்பினர்களில் 4,001 பேரை உள்ளடக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1,136 சட்டமன்ற உறுப்பினர்கள் (28 சதவீதம்) மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

இதில் அதிகபட்சமாகக் கேரளாவில் மொத்தம் உள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேர் (70 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பீகாரில் 242 சட்டமன்ற உறுப்பினர்களில் 161 பேர் (67 சதவீதம்), டில்லியில் 70 சட்டமன்ற உறுப்பினர்களில் 44 பேர் (63 சதவீதம்), மராட்டியத்தில் 284 சட்டமன்ற உறுப்பினர்களில் 175 பேர் (62 சதவீதம்), தெலுங்கானாவில் 118 சட்டமன்ற உறுப்பினர்களில் 72 பேர் (61 சதவீதம்), தமிழகத்தில் 224 சட்டமன்ற உறுப்பினர்களில் 134 பேர் (60 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இந்த ஆய்வில் மொத்தம் 114 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 14 பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குற்றப் பதிவுகள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி மாநில சட்டசபைகளில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கிரிமினல் வழக்குகள் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.