சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தொகுதி வரையறை (மறுசீரமைப்பு) குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆய்வு குழு அமைக்கப்படும் என்றும், ஒரு தேசிய கட்சியாக, காங்கிரஸ் ‘இந்த விஷயத்தில் பன்முகக் கண்ணோட்டத்தை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தொகுதி வரையறை தொடர்பான நாடு முழுவரும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில், தங்களுக்கான கூடுதல் பிரதிநிதிகள் வேண்டும் என்பதால், தொகுதி மறுவரை கோரி வருகின்றனர். அதே வேளையில் மக்களை தொகையை கட்டுப்படுத்தி உள்ள தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்கள் தொகுதி மறுவரை கூடாது என போர்க்கொடி தூக்கி வருகின்றன.
தமிழ்நாட்டில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால், 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.