பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பீகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுதுவார்கள் என  முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி தேர்தல் என்றும் கூறினார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் மாநிலத்தில்,  இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், நவ.14ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, அங்கு தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஏற்கனவே பீகார் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் புயலை கிளப்பிய நிலையில், இந்த தேர்தலில் முதன்முதலாக அரசியல் சாணக்கியன் எனப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும்  களமிறங்கியுள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், இந்த தேர்தலில்  தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளதுடன், கட்சி  வேட்பாளர்கள் யார்? யார்? அவர்கள் களம் காணும் தொகுதிகள் ஆகியவற்றை அக்.9ம் தேதி அறிவிக்க போவதாக  தெரிவித்து உள்ளார்.

இம்முறை உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என செய்தியாளர்களிடம் பேசியவர், வெளியிட இருக்கும்  வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் உள்ளது. ஆனால்,  நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது அக்.9ம் தேதி தெரிய வரும் என்றார்.

இந்த  தேர்தலில் எனது கட்சி கிட்டத்தட்ட 28 சதவீதம் ஓட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறிய கிஷோர்,  கடந்த தேர்தலில் தேஜ கூட்டணியும், இண்டி கூட்டணியும் பெற்ற ஓட்டு சதவீதம் என்பது 72 சதவீதம் மட்டுமே. பாக்கி உள்ள 28 சதவீதம் ஓட்டுகளும் இம்முறை எங்களுக்குத்தான்.

இது தவிர, கடந்த முறை தேஜ கூட்டணி மற்றும் இண்டி கூட்டணிக்கு ஓட்டு போட்டவர்களில் தலா 10 சதவீதம் ஓட்டுகள் எங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்த கணக்கின்படி பார்த்தால் தேர்தலில் எங்களுக்கு இம்முறை 48 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

நான் மிகவும் உறுதியுடன் கூறுகிறேன்… நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி தேர்தல். மகர சங்கராந்தியை மாநில தலைநகரில் உள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் அவரால் கொண்டாட முடியாது. இம்முறை பீஹார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுத காத்திருக்கின்றனர். மாநிலத்தின் எதிர்கால நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் ஓட்டு போட இருக்கின்றனர்.

இவ்வாறு  கூறியுள்ளார்.