விஜயவாடா

விஜயவாடா நகரில் நடந்துவரும் பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் பல்வேறு கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று இங்கு எதிர்பாராத விதமாக பொருட்காட்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவ தொடங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பொருட்காட்சி வளாகத்தில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. சித்தாரா பொருட்காட்சி மைதான பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.