பெங்களூரு :  மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம்  இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது.  சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை பி. சரோஜா தேவி 87 வயதில் காலமானார். தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய நபரான அவர், பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், ‘நாடோடி மன்னன்’ மூலம் புகழ் பெற்றார். அவரது பங்களிப்புகள் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய சினிமாவில் தனக்கு என தனி இடத்தை பிடித்தவர்.

‘கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தி னருடன் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அவரது உடல் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு அரசு தரப்பில் மரியாதை அளிக்கப்படு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அதன்படி, மறைந்த சரோஜாதேவியின் உடல் அவரது  சொந்த ஊரான ராம்நகர் எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள  சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்தில், ஒக்கலிகர் சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடக்கின்றன.  தஷாவரா கிராமத்தில்  இன்று மாலை நடைபெற உள்ள இறுதிச்சடங்கானது, அரசு மரியாதை உடன்  நடைபெற உள்ளத.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சரோஜா தேவி 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் ஏறக்குறைய 200 படங்கள் நடித்துள்ளார்.

மறைந்த  சரோஜா தேவி திரைமறைவில் பல பொது சேவைகள் செய்தவர். தன் கண்களை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.