டெல்லி: பிஹார் தேர்தல் சீர்திருத்தம் எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.மக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு முடக்கி வருவதால், இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவையை முடக்கி வருகின்றன. ஏற்கனவே சிந்தூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதில் தெரிவித்த நிலையில், பிகார் தேர்தல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நேற்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
,இன்று காலை அவை கூடுவதற்கு முன்பதாக நாடாளுமன்ற வளாத்தில் எதிர்க்கட்சிகள் (இந்தியா பிளாக்) பேனர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மற்றும் “பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர்களைக் கைது செய்ததற்கு” எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில், கடல் வழி சரக்கு போக்குவரத்து மசோதா 2025 மீது சுருக்கமான விவாதம் நடைபெற்றது. சுதந்திரத்திற்கு முந்தைய 100 ஆண்டுகள் பழமையான இந்திய கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் சட்டம் 1925 ஐ மாற்றுவதை இந்த புதிய மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. இதையடுத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2025 இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.