உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபௌஜா சிங்கை மோதிய SUV-வை ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜலந்தர் மாவட்டம் கர்தார்பூரில் உள்ள தாசுபூரில் வசிக்கும் 26 வயதான அம்ரித்பால் சிங் தில்லான் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். விபத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திங்களன்று தில்லான் போக்பூரிலிருந்து கிஷன்கருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது. 114 வயதான சிங், ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் தனது சொந்த கிராமமான பயாஸ் அருகே நடந்து சென்றபோது வாகனம் அவர் மீது மோதியது.
மோதியதில் சிங் கிட்டத்தட்ட 5 முதல் 7 அடி உயரத்தில் காற்றில் வீசப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் அன்று மாலையில் அவர் உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சமீபத்தில் இந்தியா திரும்பியிருந்தார், அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். “அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார், மேலும் தகவல்கள் வெளிவரும்” என்று ஒரு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 281 (பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 105 (கொலைமுயற்சி) ஆகியவற்றின் கீழ் தில்லான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, விபத்து நடந்த இடத்தில் காணப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹெட்லைட் துண்டுகள் மூலம் செவ்வாய்க்கிழமை வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதை ஜலந்தர் கிராமப்புற எஸ்.எஸ்.பி ஹர்விந்தர் சிங் உறுதிப்படுத்தினார். “வாகனத்தின் உரிமை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கைமாறியுள்ளது,” என்று எஸ்.எஸ்.பி மேலும் கூறினார், இது பல முறை மறுவிற்பனை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறிய அவர், இதனால் விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்ததாகக் கூறினார்.