மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி ரூபாண்டேஹியில் உள்ள பெல்ஹியா சோதனைச் சாவடியிலிருந்து (கோரக்பூர்) நேபாளுக்கு சென்ற சுற்றுலா பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது.

உ.பி மாநில பதிவெண் (UP 53 FT 7623) கொண்ட இந்த பேருந்தில் 40 சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர் என மொத்தம் 43 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இன்று காலை பேருந்து சென்று கொண்டிருந்த போது மத்திய நேபாளத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நேபாள ஆயுதப்படைகளின் பேரிடர் மேலாண்மை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 18 பேரின் உடல் பிணமாக மீட்கப்பட்டதாகவும் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.