சென்னை:   விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைமை . தேர்தல் பணிக்குழுவை அறிவித்து உள்ளது.  தொடர்ந்து இன்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை  10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, திமுக சார்பில் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திமுக  விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த தொகுதியில் நாளை (ஜூன் 14ந்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திமுக  தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும் தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் “தேர்தல் பணிக்குழு” பின்வருமாறு நியமிக்கப்படுகிறது.

அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று இன்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.