ஜூன் 3ம் தேதி அதிக விலையேற்றம் கண்ட பங்குகள் நேற்று வரலாறு காணாத வீஸ்ச்சி அடைந்ததன் பின்னணியில் கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து செபி விசாரணை நடத்த முன்வரவேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணி கட்சிக்கு 350க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

மேற்கு வங்கத்தில் பாஜக 26 முதல் 31 இடங்களை வெல்லும் என்று கூறியிருந்தது. ஆனால் அங்கு 12 இடங்களைத் தான் பெற்றது.

ஆனால் கருத்துக்கணிப்பில் 116 முதல் 158% மிகைப்படுத்திக் கூறப்பட்டது.

இதுபோன்ற மிகப்பெரிய இடைவெளி உள்ள ஒரு கருத்துக் கணிப்பு தவறுதலாக நடைபெற்றதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான பிறகு திங்கள் கிழமையன்று பங்குச்சந்தை பெருமளவில் உயர்ந்தது.

ஆனால், நேற்று தேர்தல் முடிவு வெளியானதும் பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது.

ஜூன் 3ம் தேதி அதிக லாபத்துக்கு விற்ற பங்குகளை ஜூன் 4ம் தேதி குறைந்த விலைக்கு மீண்டும் வாங்கி இரட்டிப்பு லாபம் பார்த்த நிறுவனங்கள் குறித்து செபி நிறுவனம் விசாரணை நடத்தவேண்டும்.

தவிர, கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்களுடன் பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.