திருப்பதி

முழுமையான தகுதி உள்ள வாகனங்கள் மட்டுமே இனி திருப்பதி மலைப்பாதையில் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் அலிபிரி வழியாக மலைப்பாதையில் செல்கின்றனர். கடந்த 2 வாரங்களாக மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.எனவே இதுதொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம்,

”திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே திருமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய அதிநவீன இயந்திரங்கள் அமைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்ய தாமதம் ஆவதால் பக்தர்கள் பொறுமையிழக்கக்கூடாது. விரைவில் வாகன தணிக்கை வரிசைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சமீப காலமாகத் திருப்பதி மலைப்பாதையில் சமீபகாலமாக விபத்துகள் அடிக்கடி நடப்பதால் அலிபிரி சோதனைச்சாவடியில் வாகனங்களின் பிட்னஸ் சரிபார்த்த பின்னரே மலைப்பாதையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளோம். அதன்படி வாகனத்தில் இன்சூரன்ஸ், பிரேக், எஸ்கலேட்டர் உள்பட முழு தகுதியிருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் டிரைவர்களுக்கும் முழு உடல் தகுதி உள்ளிட்டவை இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும்.  இதைப் போல் திருமலைக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுடன் வருவதை முற்றிலும் தடுக்க சோதனை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

எனத் தெரிவித்துள்ளார்.