நியூயார்க்

சுமார் 80000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய வானில் வால் நட்சத்திரம் பயணம் செய்ய உள்ளது.

பல ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் சூரிய மண்டலத்தில் அமைந்துள்ள பூமியில் நடப்பது வழக்கம். அவ்வகையில் வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் பயணித்து, கடந்து செல்ல உள்ளது. இதற்கு சி/2023 ஏ3 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரம், 2023-ம் ஆண்டு ஜனவரியில் வானியலாளர்களால் கண்டறியப்பட்டது.  இந்த ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்று இதன்பின் அதன் பயணம் திசை திரும்பி உள்ளது. எனவே பூமியில் இருந்து இதனை நாம் காண முடியும்.

இதனை அடுத்த 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் காண முடியாது என்பதால் இது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது, அதன் நீண்ட வால் போன்ற பகுதியை நாம் தெளிவாக பார்க்க முடியும்.

சூரிய உதயத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என்றாலும் சூரியன் மறைவுக்கு பின்னர் மேற்கு திசையில் இதனை நாம் பார்ப்பதற்கான ஏற்ற சந்தர்ப்பம் உள்ளது. கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரையிலான நாட்களில், தெளிவாக பார்க்க கூடிய வகையில் வால்நட்சத்திரம் இருக்கும்.

இந்தியாவில் தமிழகம், லடாக், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் தென்பட்ட இதனை வானியல் நிபுணர்கள் பலரும் படம் பிடித்து பகிர்ந்து வருகின்றனர்.