ம்மு

நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 68.72 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

தேர்தல் ஆணையம் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இது 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதன்படி கடந்த மாதம் 18-ந்தேதி முதல்கட்டமாக 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. பிறகு 26-ந்தேதி 2-ம் கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று  3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடந்தது.

இதில் ஜம்மு உள்பட 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தில் 2 முன்னாள் துணை முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்பட 415 வேட்பாளர்கள் இருந்தனர்.

காலை 7 மணிக்கு ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச் சாவடிகளுக்கு வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். ஏற்கனவே நடந்த 2 கட்ட தேர்தல்களை விடவும் நேற்றைய தேர்தலில் வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவகையில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, காஷ்மீரில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 63.45 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.