பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக  ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள் உள்ளது என்பதையும்,அங்கு 5லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் உள்ளதாகவும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

கார் மாநிலத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக ராகுல், ஆதாரங்களுடன்  குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த  பணியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஏற்கனவே பீகாரில், எஸ்ஐஆர் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும்  பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது என  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பாஜகவின் புதிய ஆயுதம் என்று விமர்சித்துள்ள ராகுல்,   ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளது என்பதற்கான  ஆதாரத்தை  வெளியிட்டார்.

ஹரியானா மாநிலத்தில்   மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம்; ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு.  2க்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை?  என கேள்வி எழுப்பி உள்ள  ராகுல்காந்தி,  தேவையான மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்க வில்லை  என குற்றம் சாட்டினார்.

பல கருத்துகணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறியிருந்தன. ஆனால் முடிவு வேறாக இருந்தது. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். வரலாற்றில் முதல்முறையாக தபால் வாக்குகளுக்கும், EVM வாக்குகளுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. வாக்கு மோசடி முடிவுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆட்சியையே எப்படி திருடியுள்ளார்கள் என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்தப் போகிறேன்.

ஆபரேஷன் ஆட்சி திருட்டு என்ற பெயரில் பாஜக, காங்கிரஸின் பிரமாண்ட வெற்றியை தோல்வியாக மாற்றியது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அனைத்து தரப்பும் கூறியபோது பாஜவைச் சேர்ந்த நயாப் சைனி மட்டும் வஞ்சக சிரிப்பு சிரித்தார். எங்களிடம் ஒரு டிரிக் இருக்கிறது என்று நயாப் சைனி கூறினார். ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி பேட்டியை மேற்கோள்காட்டி பாஜக சதியை அம்பலப்படுத்தினார்.

ஹரியானாவில் வெறும் 22,000 வாக்குகளில் தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஹரியானாவில் ராய் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை ஒரே நபர் ஓட்டளித்துள்ளார்.

ஹரியானாவில் 22 முறை வாக்களித்த வாக்காளரின் புகைப்படம் பிரேசிலைச் சேர்ந்த மாடல் ஒருவருடையது. ஹரியானாவில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர், திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம். ஹரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. 8ல் ஒரு வாக்கு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் திருடப்பட்டது. ஹரியானாவில் ஒரே ஒரு புகைப்படத்துடன் ஒரு சட்டமன்ற தொகுதியில் 100 வாக்குகள் இடம்பெற்றுள்ளது.

ஹரியானாவில் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆண் வாக்காளர் வாக்குப் பதிவு செய்தது அம்பலம். மாதவ்புரா, அலந்த் தொகுதிகளில் நடந்தது தனிப்பட்ட சில தொகுதிகளில் நடந்த மோசடி அல்ல என்பது அப்போதே தெரிந்தது. தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த மோசடியை கண்டுபிடித்துள்ளோம். ம.பி., சத்தீஸ்கர், மராட்டியத்தில் அதே மோசடி நடந்தது தெரிய வந்தது என்றார்.

ஹரியானா முழுவதும் வாக்காளர் பட்டியலில் 1,22,000 போலி புகைப்படங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக நேரலை செய்து, அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,  இல்லாத ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் உள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்த ராகுல்,  உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஆயிரக்கணக்கான பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளனர் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையச் செய்வதில் சர்க்கார் சோரி நடவடிக்கை வெற்றி பெற்றது என்று குற்றம் சாட்டியதுடன்,   வாக்கு திருட்டு தொடர்பாக, பல ஆயிரம் பக்க ஆவணங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி யுள்ளார்.
முன்னதாக பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, ”பீகாரில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெரியும். எனவே அவர்கள் வாக்கு திருட்டை நாடுவார்கள். மகாராஷ்டிரா, அரியானா மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்கை பாஜக திருடியது, இப்போது பீகார் தேர்தலலிலும் திருட விரும்புகிறது.
ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள், வாக்குத்திருட்டை நடக்க விடமாட்டார்கள். வாக்கு திருட்டு என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்பதை பீகார் அறிந்துள்ளனர்.  பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நாட்டில் வெறுப்பின் விஷத்தைப் பரப்பியுள்ளனர். பீகார் மக்கள் இதை நன்கு புரிந்துகொள்கிறார்கள்.
வாக்குகள் திருடப்பட்டால், அனைத்து உரிமைகளும் இழக்க நேரிடும் என்பதை பீகார் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். சத் பூஜையின் போது நரேந்திர மோடி யமுனையில் குளிக்கப் போகிறார் என கூறினார்கள், ஆனால் அவர் குளிப்பதற்கு ஒரு சுத்தமான நீர் குழாய் பொருத்தப்பட்ட சிறப்பு குளம் கட்டப்பட்டது. ஆனால் சுத்தமான நீர் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டது ஊடகங்களில் காட்டப்பட்டபோது, ​​நரேந்திர மோடி யமுனையில் குளிக்க மறுத்துவிட்டார்.காங்கிரஸ் கட்சி, மக்களுடன் சேர்ந்து, சுதந்திரத்திற்காகப் போராடி நாட்டிற்கு ஒரு அரசியலமைப்பை வழங்கியது. இந்த அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர், காந்தி, சர்தார் படேல், நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.  பாஜக-ஆர்.எஸ்.எஸ் என ஒரு சிலர் நாட்டை ஆள விரும்புகிறார்கள், மீதமுள்ளவர்கள் உரிமைகள் இல்லாமல் வாழ்கிறார்கள். மோடி பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்”.

இவ்வாறு  கூறினார்.