கொல்கத்தா

மேற்கு வங்க அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையொட்டி சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி வேண்டும் எனக் கோரி, பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து கொல்கத்தாவின் சால்ட் லேக் என்ற பகுதியில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.

அவர்கள் இதை ஏற்காமல் சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பு, தொடர்ந்து 7 ஆவது நாளாக இன்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்  இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்துள்ளது,  மேற்கு.வங்க சுகாதாரத்துறை செயலாளர் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பயிற்சி மருத்துவர்களுக்கு இ மெயில் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.