நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி:
 
newsbond
திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. வரவேற்பும் விமர்சனமும் எழுந்திருக்கிறது. இலவசம் இல்லாதது உட்பட சில விசயங்கள் பாராட்டு பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் கல்விக்கடன் முழுமையாக ரத்து என்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனென்றால் கல்விக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி முழுமையாக ரத்து என்பது நடக்காது. இதை அறியாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.  அதே போல நூறு நாள் வேலைத்திட்டம் போன்றவை மத்திய அரசு தொடர்பானது. அதை இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஈரோட்டில் ஒருங்கிணைந்த மஞ்சள் ஏல மையம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறது தேர்தல் அறிக்கையில். ஆனால், அங்கு அம்மையம் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்கு தயாராக இருக்கிறது. இப்படி மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களிலும் பல குளறுபடிகள் தேர்தல் அறிக்கையில் உள்ளன.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வட்டாரத்தில் எழுந்துள்ளது.
“தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஆகவே அதில் கவனம் செலுத்த அ.தி.மு.க. விரும்புகிறது. ஏற்கெனவே இரு கட்சிகளாலும் டிவி, பேன், மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு என்று கொடுக்கப்பட்டுவிட்டன. ஆகவே அடுத்தததாக என்ன கொடுக்கலாம் என்று மூளையைக் குடைந்த அ.தி.மு.க. தரப்பு வாஷிங்மிஷின் இலவசம் என்று அறிவிக்க இருக்கிறது” என்ற தகவல் கசிந்துள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க தரப்பும் சும்மா  இல்லை. தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இல்லாவிட்டாலும், பிரச்சாரத்தின் போது இலவசங்ள் அறிவிக்கப்படுமாம். அதாவது கருணாநிதி பிரச்சாரத்துக்கு வரும்போது, என்ன இலவசம் அறிவிக்கலாம் என்று அறிவாலயத்தில் பெரிய டிஸ்கஷனே  நடந்துவருகிறது. ஏ.சி. கொடுக்கலாமா என்றும் தீவிரமான ஆலோசனை நடக்கிறதாம்.
கடந்த காலங்களிலும்கூட, தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத அறிவிப்புகளை, பிரச்சாரத்தின்போது சொல்லப்பட்டது உண்டு.
ஆக, மீண்டும் இலவச போட்டியில் இறங்கியிருக்கின்றன அ.தி.மு.கவும், தி.மு.கவும் என்பதே லேட்டஸ்ட் தகவல்.