"பாரிவள்ளல்" பச்சமுத்து
“பாரிவள்ளல்” பச்சமுத்து

பத்திரிகையாளர் “தாகம்” செங்குட்டுவனின் முகநூல் பதிவு:
“உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கிய நிலையில் எனது தாயாரை கடந்த 20 ஆம் தேதி சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தேன் . அவசர சிகிச்சை பிரிவில் பல மருத்துவர்கள் சோதித்தப் பிறகு , நரம்பியல் துறையை சார்ந்த உதவி மருத்துவர் பரிசோதனை செய்தார் !
” உங்க அம்மாவுக்கு பிரச்சனை ஏதுமில்லை . ரத்த ஓட்டம் குறைவாக உள்ளது . சரி செய்துவிடலாம் ” என்றார் !
சில மணி நேரம் கழித்து அங்கு வந்த நரம்பியல் நிபுணர் ஸ்ரீதரன் … ” உங்க அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு ” ப்ரெயின் எம்.ஆர்.ஐ எடுக்கச் சொல்லி இருக்கேன் ” என்று குண்டைத் தூக்கிப் போட்டார் !
” உங்கம்மாவுக்கு ஒன்றுமில்லை ” என்று சில மணிநேரம் முன்பு சொன்ன உதவி மருத்துவர் என்னைப் பார்த்து அசடு வழிந்தார் !!
22
இது நடந்தது மதியம் 2 மணிக்கு !
மாலை 5 வரை எம்.ஆர். ஐ ஸ்கேன் எடுக்கப்படவில்லை !
சிம்ஸ் மருத்துவமனை ‘புதிய தலைமுறை’ நிறுவனத்தின் அங்கம் என்பதால் , ஊடக நண்பர் ஒருவரின் உதவியுடன் அம் மருத்துவமனையின் துணை இயக்குநர் மருத்துவர் ராஜூவிடம் முறையிட்டேன்.
அவரும் என் தாயாரை பரிசோதித்து ” அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை ” என்று உறுதி அளித்தார் .”
” ஏன் பரிசோதனை செய்ய இத்தனை தாமதம் ? ” என்று நிர்வாகத்தினரை கடிந்திக்கொண்டவர் , உடனே பரிசோதனை செய்யக் கட்டளை இட்டுவிட்டு சென்றார் !
எம்.ஆர். ஐ ப்ரெயின் ஸ்கேன் எடுத்து பல மணி நேரம் கழித்தும் , எந்த மருத்துவரும் வரவில்லை !
முன் பணம் 5000 ரூபாய் கட்டிய பிறகு இரவு 8 மணிக்கு விவேக் அய்யர் என்ற உதவி நரம்பியல் மருத்துவர் வந்தார் . ” எம்.ஆர். ஐ ஸ்கேனில் எந்த பிரச்சினையும் இல்லை . ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளது . பயப்பட வேண்டாம் ” ! என்றார்
இரவு 10 மணிக்கு மேல் பல போராட்டங்களுககு பிறகு அறைக்கு மாற்றப்பட்டார் அம்மா !
மறுநாள் ஞாயிறு எந்த மருத்துவரும் வரவில்லை .
திங்கள்கிழமை காலை மீண்டும் முதலில் பரிசோதித்த பெண் மருத்துவர் , உதவி நரம்பியல் மருத்துவர் வநதார் . ” நத்திங் அளார்மிங் . ஸ்கேன் பாத்தேன் ” என்றார் !
12 மணி அளவில் நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஸ்ரீதரன் சக மருத்துவர்களுடன் வந்தார் . ” அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு ” என்று மீண்டும் பீதியை கிளப்பினார் .
வழகககம் போல் அசடு வழிந்தனர் உதவி மருத்துவர்கள் !!
அவசரம் அவசரமாக என் அம்மாவை மீண்டும் பரிசோதனை கூடத்திற்கு அழைத்து சென்றனர் !
“ப்ரெயின் ஏஞசியோ சி.டி ஸ்கேன் எடுகக வேண்டும் ” என்றனர் !
அதுவும் நடந்தது …ஸ்கேன் அறை வாசலில் இரண்டு மணிநேரம் மயக்க நிலையிலேயே காக்க வைக்கப்பட்டார் எனது தாய் !! கேட்டால், “எங்களிடம் இருப்பது ஒரே ஒரு ஸ்கேனர்தான் ! மாலை 6 வரை அவுட் பேஷன்ட்டுகளுக்கு ஸ்கேன் செய்த பின்பே இன் பேஷன்ட்டுகளுக்கு ஸ்கேன் செய்யப்படும் ” என்று அலட்சிய பதில் வந்தது !!
அதே மயக்க நிலையில் கண் பரிசோதனை கொடுமையும் நிகழ்ந்தது !
நான் , என் அக்கா , ஏற்கனவே சென்னை விஜயா மருத்துவமனையில் நடந்த தவறான சிகிச்சைக் காரணமாக பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட என் தந்தை …மூவரம் கட்டிக்கொண்டு அழுததே மிச்சம் !
” எல்லாம் எனக்கு இரண்டா தெரியுதுடா ! நடக்க முடியல ! ” அம்மா தழுதழத்தக் குரலில் பேசிய போதும் , எவ்வித சிகிச்சையும் தொடங்கப்படவில்லை !!
மறு தினமும் விடிந்தது …செவ்வாய் காலை ….
வேண்டா வெறுப்பாக அறைக்கு வந்தார் நரம்பியல் நிபுணர் ஸ்ரீதரன் தன் குழுவினருடன் !
மீண்டும் சக மருத்துவர்களுடன் ஆலோசனை ! ரத்த அழுத்த மாத்திரை ஆம்லாங் மற்றும் வெர்டின் தவிர வேறு எந்த மாத்திரையும் தரப்படவில்லை !
” ப்ரெயின் சி.டி ஏஞசியோ டெஸ்டில் , பிளாக் உள்ளதாக உறுதி செய்யப்பட்டப் பின்பும் எந்த சிகிச்சையும் தொடங்கப்படவில்லை !
என் தந்தைக்கு விஜயா மருத்துவமனையில் மருத்துவர் ரங்கநாத ஜோதி அலட்சியத்தால் நடந்த பக்கவாத விபரீதம் , என் அம்மாவுக்கும் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் அவரை நான் சிம்ஸ் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்தேன்!
ரவி பச்சமுத்து
ரவி பச்சமுத்து

சுளையாக 43000 ரூபாய் கட்டிய பிறகே டிஸ்சார்ஜ் அனுமதி கிடைத்தது ! பல்வேறு ஊடக நண்பர்களிடம் முறையிட்டும் பாரி வேந்தர் பச்சமுத்து நிறுவனத்திடம் எதுவும் பலிக்கவில்லை ! சிம்ஸ் மருத்துவமனை சுவர்தோறும் சிரித்தார் புதிய தலைமுறை மற்றும் இந்திய ஜனநாயக கட்சித்தலைவரின் வாரிசு ….ரவி பச்சமூத்தூ …பச்சமுத்து …ஆங்கிலத்தில் பச்சமூத்தூ என்றே எழுதப்பட்டிருந்தது !! வாஸ்து பெயராம் !!
சிம்ஸ் தந்த டிஸ்சார்ஜ் சம்மரியில் என் அம்மாவுக்கு ப்ரெயின் ஸ்ட்ரோக் வந்ததாகவே எழுதப்பட்டுள்ளது !
தற்போது என் தாயாரை கவனிக்கும் சென்னையின் முதல்நிலை நரம்பியல் நிபுணர் ….அந்த டிஸ்சார்ஜ் சம்மரியை தூக்கி எறிந்து விட்டு சொன்னார் ….” உன் அம்மாவை நான் குணமாக்குகிறேன். ஸ்ட்ரோக் என்பதெல்லாம் பச்சைப் பொய் !!
எனக்கு நெருக்கமான இன்னொரு ஊடக நண்பர் சொன்னார் …” தோழா …சிம்ஸ் மருத்துவமனை இடத்தை 400 கோடிக்கு வாங்கினார்கள் . இப்படித்தான் வசூலிப்பார்கள் ” !
# நேர்பட ….யார் பேசுவது ? சிம்ஸ் மருத்துவமனை சித்தாந்தங்களை !!”
– இவ்வாறு தனது முகநூல் பதிவில் வருத்தத்துடன் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர்  தாகம் செங்குட்டுவன்.