அன்னை தெரசாவுக்கு செப்.4-ல் புனிதர் பட்டம்!
ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர் அன்னை தெரசா. 1910–ல் அல்பேனியாவில் பிறந்த தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார். 1951–ல் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தனது சமூக சேவைகளால் மக்கள் மனங்களில் இமயமாக உயர்ந்த அன்னைக்கு 1979ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு 1980–ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது.
அன்னை தெரசா, தனது 87–வது வயதில் 1997–ல் செப்டம்பர் 5–ந்தேதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண் வயிற்று புற்றுநோய் தீர அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்தார். 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார் அன்னை தெரசா. இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார். முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும்.
இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கீகரித்துள்ளார். இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார். ஆனால் புனிதர் பட்டம் வழங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று அறிவித்துள்ளார்.