சென்னை: உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் தொழிலாளர்களின் ஒய்வூதியம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின்அறிவுறுத்தலின் பேரில், மத்தியஅரசின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பணியாளர்  ஊதிய உச்சவரம்பைவிட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்புகளை தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து பணியில் இருந்த ஊழியர்களுக்கு புதிய வழிமுறைகளை வெளியிடப்பட்டது.

அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
01.09.2014 அன்று அல்லது அதற்கு முன் இ.பி.எஸ்-ன் சந்தாதாரராகத் தொடர்ந்த ஊழியர்களுக்கு ஆன்லைன் வசதி வழங்கப்படும். அதன் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
“மண்டல பி.எஃப் ஆணையர், விரிவான பொது தகவல்களுக்கு அறிவிப்பு பலகை மற்றும் பேனர்களில் போதுமான அறிவிப்பை வைக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிக ஊதியத்தில் பங்களித்திருந்தும், விருப்பத்தை முறையாகப் பயன்படுத்தாத ஊழியர்கள் இப்போது EPFO-ன் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு சரி செய்தல் தேவைப்படும் பங்கின் விஷயத்தில், நிதிக்கு ஏதேனும் மறு டெபாசிட் செய்தால், கூட்டு விருப்ப படிவத்தில் பணியாளரின் வெளிப்படையான ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, பத்தி 11 (3) -ன் கீழ் விருப்பத்தை சமர்ப்பித்திருந்த ஓய்வூதியர்கள் உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழிமுறைகள் கடந்த டிசம்பர் 29-ந் தேதி மற்றும் கடந்த ஜனவரி 5-ந்தேதியிட்ட சுற்றறிக்கையின்படி கள அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, ஓய்வுக்கு முந்தையதாக கூட்டு விருப்பத்தை சமர்ப்பித்த ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இ.பி.எப்.ஓ.) இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடந்த 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அறங்காவலர் குழு தலைவர், அத்தகைய ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற வருகிற மே 3-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.