மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ் பாடம் எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கடந்த நான்கு நாட்களாக அரசியல் கட்சியினர் இதனை அரசியலாக்கி வருகின்றனர்.

தமிழக அரசு பாடத்திட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் தவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் தமிழ் வழிக் கல்வியே இருந்து வரும் நிலையில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட பரிட்சைக்கு மாணவர்கள் வராததன் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, வேதாரண்யத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

முன்பெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றாலோ, அவர்கள் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது பெண்கள் திருமணம் ஆகி விட்டாலோ இனி அவர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள் என்று தெரிந்து விட்டால் வருகை பதிவேட்டில் பெயரை நீக்கிவிடுவார்கள்.

இப்போது EMIS இணையதளம் வந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு எத்தனை மாதங்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை நீக்கமுடியாது. கல்வித்துறை கண்காணித்து அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் தரும் இடைநின்ற மாணவர்களை வட்டாரவளமைய உதவியுடன் தேடிக்கண்டுபிடித்து அறிவுரை வழங்கிபள்ளியில் சேர்க்கவேண்டும்.

11 ம் வகுப்பில் வகுப்பிற்கே வராத மாணவர்கள் பெயர்கூட 12ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் தடுக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் தேர்வு பயத்தால் அல்லது கற்றல் இடைவெளி காரணமாக தேர்வு எழுதவில்லை.

இதுதான் தேர்வு எழுதாத மாணவர்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்பது அரசுப்பள்ளி ஆசிரியராக என் கருத்து. இந்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் முன்பே கற்றலை நிறுத்தி இருப்பார்கள். இந்த தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவது எளிது. மீண்டும் தேர்வெழுத வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான முயற்சிகளை ஆசிரியராக தானும் தன்னைப் போல பல ஆசிரியர்களும் மேற்கொண்டு வருவதாக அதில் பதிவிட்டுள்ளார்.