மதுரை: மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கிடப்பில் போடப்பட்ட நிலையில், ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’  என மதுரையில் மா.கம்யூ தலைமையில்திமுக கூட்டணி கட்சியின் போராட்டம் நடத்தினர். அவர்களின் கைகளில், எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வைத்துக்கொண்டு முழக்கம் எழுப்பினர்.

மதுரை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகளை கடந்த நிலையில், இன்னும்  கட்டுமான பணிகள்  தொடங்கப்படவில்லை. முதலில், இடம் கையகப்படுத்துவதில் பிரச்சினை என கூறப்பட்டது. பின்னர் நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நேரத்தில், மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி  தாமதமாவதை கண்டித்தும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி அகியோரும், தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. தளபதி, ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. பூமிநாதன் மற்றும் தோழமை கட்சியினர், தொழில் முனைவோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகளான தூத்துக்குடி இருவழி ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மதுரையில் துவங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுப்படுத்தி, குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.