சென்னை,

அரசியல் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள கமல், அந்த சுற்றுப்பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று எம்ஜிஆர் படத்தின் தலைப்பை சூட்டியுள்ளார்.

அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த கமல், அடுத்த மாதம் (பிப்ரவரி) 21ந்தேதி தனது கட்சியின் பெயரை அப்துல் கலாம் பிறந்த மண்ணான ராமநாதபுரத்தில் அறிவிக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து, மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்கட்டமாக ராமநாதபுரத்தில் இருந்தே தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் கமல், தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு  ‘நாளை நமதே’ என பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே ‘நாளை நமதே.  அரசியல் பயணத்தின் நோக்கம் என்றும், இதன்  முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும்,  கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது என்று கூறி உள்ளார்.

மேலும், கிராமங்களை தத்தெடுப்பது குறித்து ஹார்வர்டு பல்கலையில்  பேச இருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.