டில்லி

நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எனப் பலரது மொபைல் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சென்ற நாடாளுமன்றத் தொடரில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தொடரே முடங்கிப் போனது.  

இன்று உச்சநீதிமன்றம் இது குறித்து புலனாய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சை விசார்ணைக குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்,

“உச்சநீதிமன்ற உத்தரவு பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து தாங்கள் கூறிய புகாருக்கு வலு சேர்த்துள்ளது. உச்சநீதிமன்றம் பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய பல கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்புகிறோம்.

பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரி யார்? யார் யாருக்கு எதிராக பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது? வேறு எந்த நாடாவது இந்திய மக்கள் பற்றிய தகவல்களை வேறு எந்த நாடாவது திரட்டி உள்ளதா?

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் முயற்சியாகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.  உச்சநீதிமன்றம் பெகாசஸ் விவகாரத்தை விசாரிப்போம் என்று அறிவித்திருப்பது மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

மீண்டும் நாடாளுமன்றத்தில் பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்ட பிரச்சனை குறித்த விவகாரங்களை எழுப்புவோம். பாஜக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நிச்சயம் விரும்பாது என்றாலும்தொடர்ந்து வலியுறுத்துவோம்”

எனக் கூறியுள்ளார்.