சென்னை: அதிமுக கூட்டணியில் சேர விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட விருப்பம் என்றும், இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது, பாஜக கட்சி மட்டுமின்றி, கூட்டணி கட்சியான அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியிடின்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வாகிறார்.

இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வுக்கு என்று தனித்தன்மை உள்ளது. குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல. எங்களை யாரும் குட்ட முடியாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும். தேர்தல் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றவர்,  கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவே ரயில் என்ஜின் போன்றது , ரயிலில் எந்தெந்த பெட்டிகள் இடம்பெற வேண்டும் என்பதை என்ஜின்தான் முடிவு செய்யும் என்றும்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.