டில்லி

ல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக  அளவில் கொரோனா தொற்றி வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 13.81 லட்சத்தைக் கடந்து தற்போது 6.1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

பல மாநிலங்களில் பெருநகரங்களில் உள்ள அளவுக்கு மருத்துவக் கட்டமைப்பு சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இல்லை.   ஆகவே இம்மாநிலங்களில் நகரங்களை விட கிராமப்புறங்களில் தொற்று அதிகமாக உள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நகர்ப்புறங்களில் தொற்று அதிகமாக உள்ளது.  அதே வேளையில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கிராமப்புறங்களில் அதிகம் தொற்று உள்ளது.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நகர்ப்புறங்களில் 27% ஆகவும் கிராமப்புறங்களில்  73% ஆகவுமுள்ள்து.  இதைப்போல் பீகார் மாநிலத்தில் 27.8 % தொற்று மட்டுமே நகர்ப்புறங்களில் உள்ளது.  பீகார் மாநிலத்தில் மற்ற மாநிலங்களை விடக் குறைவான அளவிலேயே படுக்கை வசதிகள் உள்ளன.   இதே நிலையில்  ஒரிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களும் உள்ளது.