சென்னை

பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பவளவிழா நடந்தது.  அதில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அவர் தனது உரையில், “வெளிநாட்டு முதலீடுகளுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும், சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன நாட்டில்.பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கு உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொதுத் துறை- மற்றும் தனியார்த் துறை பங்களிப்பை ஊக்குவிப்பது அவசியம்.

இரண்டாவது அலை கொரோனா பொருளாதார மறுமலர்ச்சியை மந்தப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்து, மீட்புப் பாதையில் உறுதியாக உள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.  தடுப்பூசி எடுப்பது குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டுக்கு ஆற்றும் புனித செயல் ஆகும்.

இந்தியா.பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது.  நாட்டில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அறிவியல், மனித வளமும் அதிகம் உள்ளது.ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் வாயிலாக, புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற, சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டியது அவசியம் ஆகும்” என தனியார்மயமாக்கலை ஆதரித்துப் பேசி உள்ளார்.