சென்னை: வீரவணக்க நாளை முன்னிட்டு மறைந்த  மொழிப்போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளை கவுரப்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி வீரவணக்கம் நாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று மொழிக் காவலர்களின் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் படத்தை பார்வையிட்ட பிறகு, திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.