டில்லி,
பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான வருண்காந்தி ராணுவ ரகசியங்களை கசியவிட்டார் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் ஆம்ஆத்மி கட்சி உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.
பெண்ணாசையால், ஆயுத வியாபாரி மற்றும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு ராணுவ ரகசியங்களை தெரிவித்த தாக வருண் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது  இந்திய அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஸ்வராஜ் அபியான் அமைப்பைச்சேர்ந்த பிரபல வக்கீல் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் வருண்காந்தி பற்றிய கடிதத்தை வெளியிட்டனர்.
varun-gandhi-bhusan
அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ஸ் ஆலன் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தின் பிரதியில், வருண் காந்தி ஆயுத வியாபரிகளுக்கு இந்திய ராணுவத்தின் ரகசியத்தை கசிய விட்டதாக கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அழகிகளை  வருண் காந்தியிடம் பழக விட்டு அது தொடர்பான அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா வருண் காந்தியை மிரட்டி, இந்திய ராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் உள்ளிட்ட தகவல்களை பெற்றதாக அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை வருண் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கூட அரசியலில் இருந்து விலக தயார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,  2004 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் வெர்மாவை சந்திக்கவில்லை எனவும் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.