த்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஐயப்பன் கோயில், சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது.

சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது 18 படிகள்தான். சபரிமலையில் இந்த 18 படிகளை ஏறிச் சென்ற பின்தான் ஐயப்பனை தரிசிக்க முடியும். ஆனால் கீழே நின்ற படியே 18ம் படிகளுடன் சேர்ந்து ஐயப்பனை தரிசிக்க கூடிய ஒரு தலம் சென்னையை அடுத்த வேளச்சேரி அருகேயுள்ள மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது உத்தர சபரிமலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆம், சபரிமலையைப் போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. அதற்கு மேல் ஐயப்பன் யோகபட்டத்தில் அருட்பாலிக்கிறார். பக்தர்களாக விரும்பி இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதுண்டு. ஆனால் இந்த ஆலயமோ ஐயப்பன் விரும்பியதால் கட்டப்பட்டது. 40 ஆண்டுக்கு முன் இந்த ஆலயம் உருவானது. இந்த ஆலயத்தை ஐயப்பன் மண்டலி என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது.

1970க்கு முன்னர் மடிப்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்திருந்தது. அப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களும் இருந்தன. 1970ம் ஆண்டு தொடக்கத்தில்தான் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்கள் மடிப்பாக்கத்தில் குடியேற தொடங்கினர். இப்போது ஐயப்பன் ஆலயம் இருக்கும் இடமும், அதை சுற்றியுள்ள நிலப்பகுதிகளும் ஒருவருக்கு சொந்தமாக இருந்தது. ஏரிக்கரையில் அமைந்திருந்த நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய அவர் முடிவு செய்தார்.பொறியாளரிடம் கூறினார். அவரும் அந்த நிலத்தில் பிளாட் போடுவதற்கான வரைபடம் தயாரித்தார். அப்போது 6வது பிளாட் மட்டும் சரியாக அந்த வரைபடத்தில் அமையவில்லை. கடின முயற்சியில் வரைபடம் தயாரித்து கொடுத்தார். பிளாட் போடப்பட்டு நிலம் விற்பனை நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் நிலத்தின் உரிமையாளரின் கனவில் சிறு குழந்தையாக ஐயப்பன் வந்துள்ளார். ‘‘நீ போடும் பிளாட்டுகளில் 6வது பிளாட் எனக்கு வேண்டும். அதில் நான் நிலையம் கொள்ளப்போகிறேன்,’’ என்று கூறியுள்ளார்.

விழித்தெழுந்ததும் நிலத்தின் உரிமையாளருக்கு எதுவும் புரியவில்லை. எனினும் ஐயப்பன் கனவில் கூறியதை அவர் அலட்சியப்படுத்தவில்லை. பிளாட்டுகள் போடப்பட்டு எண்கள் இடப்பட்டன. அதில் 6வது பிளாட், சாலையோர பிளாட்டாக அமைந்தது. இதைப்பார்த்த நிலத்தின் உரிமையாளருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஐயப்பன் கோயில் கட்ட 6வது பிளாட்டை கொடுக்கலாம் என்றால் அதை யாரிடம் கொடுப்பது என்றும் தெரியவில்லை. மற்ற பிளாட்டுகள் விற்பனையாகி விட்டன. 6வது பிளாட்டை வாங்க சிலர் விரும்பினர். அதிக தொகை கொடுக்க முன் வந்தனர். அப்போது நிலத்தின் உரிமையாளர் அதை கோயில் கட்ட வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் கூறி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மடிப்பாக்கத்தில் வசித்து வந்த பெரியவர்கள் தங்கள் பகுதியில் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்று எண்ணினர். அதற்காக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நிலத்தின் உரிமையாளர் கோயில் கட்டத்தான் 6வது பிளாட்டை தானமாக கொடுப்பேன் என்று கூறியதை அறிந்தனர். அதனால் நிலத்தின் உரிமையாளரை சந்தித்தனர்.

‘‘ஐயப்பன் கோயில் கட்ட வேண்டும்.’’ அவ்வாறு கட்டுவது என்றால் 6வது பிளாட்டை தானமாக தருகிறேன்,’’ என்று கண்டிப்பாகச் சொன்னார் நிலத்தின் உரிமையாளர். அவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன்படியே அவர், நிலத்தை தானமாக கொடுத்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மண்டலி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். கோயில் கட்டும் பணிகளை 1975ம் ஆண்டு தொடங்கினர்.இதனிடையே சென்னை தியாகராய நகரில் உள்ள சிவா – விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் சந்நதி கட்ட 1967ம் ஆண்டு முடிவு செய்தனர். அதற்காக ஐயப்பன் சிலையை உருவாக்கினர். சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னால் ஒருநாள் காஞ்சி மகா பெரியவர், அந்த ஆலயத்திற்கு வந்தார். அவரிடம், கோயில் நிர்வாக குழுவினர் ஆலயத்தில் ஐயப்பன் சந்நதி கட்டுவது பற்றி கூறினர். ‘‘சிவனும், விஷ்ணும் இங்கு ஐக்கியமாகி அருள்பாலிக்கும் போது, ஐயப்பனுக்கு தனி சந்நதி கட்ட தேவையில்லை,’’ என்று கூறினார். ‘‘ அப்படியானால், இந்த ஐயப்பன் சிலையை என்ன செய்வது?’’ என்று கோயில் அமைப்பாளர்கள் கேட்டனர். ‘‘சிலையை நவதானியத்தில் நிறுத்தி வையுங்கள். போக வேண்டிய இடத்துக்கு ஐயப்பனே போய் விடுவான்,’’ என்றார் பெரியவர். அவர்களும் அப்படியே செய்தனர்.

எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், 1976ம் ஆண்டு ஒரு நாள், சிவா – விஷ்ணு கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் ஐயப்பன் தோன்றி, ‘‘நான் மடிப்பாக்கத்துக்கு போகப்போகிறேன்,’’ என்று கூறியுள்ளார். நிர்வாகிக்கு மடிப்பாக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை. மறுநாள் மற்றவர்களிடம் தனது கனவை பற்றி கூறினார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையில் மடிப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் மண்டலியைச் சேர்ந்த குழுவினர் ஒருவரின் கனவில் தோன்றிய ஐயப்பன், ‘‘நான் மாம்பலத்தில் இருக்கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்,’’ என்று கூறியுள்ளார். அப்போதுதான் சிவா – விஷ்ணு ஆலயத்தில் நவதானியத்தில் ஐயப்பன் சிலை இருப்பது தெரியவந்தது. உடனே அந்த குழுவினர் சிவா – விஷ்ணு ஆலய நிர்வாகிகளை அணுக, அவர்கள், ‘பெரியவா வாக்கு இப்படி பலித்ததே!’ என்று சந்தோஷம் கொண்டு, மேளதாளம் முழங்க ஒரு சுப தினத்தில் சுபஹோரை பொழுதில் ஐயப்பன் சிலையைக் கொடுத்தனர். கோயில் திருப்பணிகள் நிறைவடைந்தன. 1978ம் ஆண்டு ஜூன் மாதம் மகாகும்பாபிஷேகம் நடந்தது.

தனக்கு தாந்திரிக முறையில் பூஜை செய்ய வேண்டும் என்பதையும் ஐயப்பனே கனவில் வந்து தெரிவித்ததையடுத்து, ஐயப்ப மண்டலி நிர்வாகிகள் சபரிமலைக்கு சென்று அங்கிருந்த தலைமை தந்திரி நீலகண்டரருவை சந்தித்து மடிப்பாக்கத்துக்கு வருமாறு அழைத்து வந்து தாந்திரிக முறையில் பூஜை செய்யும் வழிமுறைகளை கூறி சென்றார். அதன்படியே பூஜை நடைபெற்று வருகிறது. ஐயப்பன், மடிப்பாக்கம் மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். ஏரிக்கரையிலிருந்து பார்த்தாலே 18 படிகளுடன் சேர்ந்து ஐயப்பனை காண முடியும். சபரிமலையை போன்று இருமுடி கட்டி வருபவர்கள் மட்டுமே 18 படிகள் வழியாக செல்ல அனுமதி உண்டு. சபரி மலையில் மகரஜோதி தெரியும் அதே நாளில் இங்கும் மகர ஜோதி தீபம் நடத்தப்படுகிறது.


இக்கோயிலில் ஐயப்பனுக்கு பின்புறம் பிருங்கி முனிவரின் விக்கிரஹம் உள்ளது. இப்போது பரங்கிமலை என்று அழைக்கப்படுவது முன்பு பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டது. அந்த மலையில் தவமிருந்த பிருங்கி முனிவர் ஒரு மூலிகையை தேடி மடிப்பாக்கம் ஏரிப்பகுதிக்கு ஒரு முறை வந்துள்ளார். அப்போது முனிவர் தான் அமர்ந்த இடத்தில் பூஜையை மேற்கொண்டார். பூஜையின் போது ஐயப்பனை நினைத்து பூஜித்தார். அவ்வாறு பூஜித்த இடத்தை தான் ஐயப்பர், விரும்பி கேட்டு வந்து அமர்ந்தார். அவரை தவத்தின் மகிமையால் அழைத்தமையால் பிருங்கி முனிவரின் விக்கிரகத்தை ஐயனின் சந்நதிக்கு பின்னர் அமைத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது, ஐயப்பன் கோயில் அருகே குருவாயூரப்பனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஐயப்பன் கோயில் பக்கத்திலேயே குருவாயூரப்பன் கோயில் கட்டப்பட்டுள்ளது.