டில்லி,
நாடு முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள  விமான நிலையங்களை பராமரித்து விரைவில் இயக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் 43 விமான நிலையங்கள் இயக்கப்படாமல் மூடப்பட்டே உள்ளது. இந்த விமான நிலையங்களை மீண்டும் பராமரித்து  இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் ஆர்.என். செளபே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவாவில்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

பயன்படாத விமான நிலையங்கள் புணரமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டு வரும். இதன்மூலம் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்றார். இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் 72 விமான நிலையத்துடன் இந்த 43 விமான நிலையங்களும் இணைத்து பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும்  விமான நிலையங்களை  இயங்குவதற்காக 11 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்க ளைப் பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.