சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவகாரம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இனி பல்கலைக்கழகங்களில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முன்னதாக உயர்கல்வி செயலாளர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும்  அனுமதி பெறவேண்டும்”. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பதிவாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு கட்டணம், அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைப்பதற்காக குழு ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் இக்குழு தரும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழைய தேர்வு கட்டணமே மாணவர்களுக்கு வசூலிக்கப்படும். எனவே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.

இனி போலி டாக்டர் பட்டம் சர்ச்சை எந்த பல்கலைக்கழகத்திலும் நடைபெறாது. இனி எந்த பல்கலைக்கழகத்திலும், தனியார் சார்பாகவோ அல்லது பல்கலைக்கழகம் சார்பாகவோ எந்தவொரு கூட்டம் நடைபெற்றாலும் முன்னதாக உயர்கல்வி செயலாளர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்றார்.

மேலும்,  துணைவேந்தர்கள் மசோதா மட்டும் அல்ல ஆன்லைன் சூதாட்ட மசோதாவையே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். துணைவேந்தர்கள் மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.