வாஷிங்டன்:

போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற வலி நிவாரணி குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய டிரம்ப், போதை பொருட்கள் குறித்து பேசினார். அப்போது, ஹாம்பஷ்யர், ஓபியோட் எனப்படும் வலி நிவாரணி மாத்திரையபால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று கூறினார்.

மேலும் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும்  ’ஓபியாட்’ எனப்படும் மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில், போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

போதை பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம்  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு அரசியல் மற்றும் சட்ட ரீதியான எதிர்ப்பை தனது நிர்வாகம் சந்திக்கும் எனவும் கூறினார்.

மேலும், “போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நாம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றால் நாம் நமது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்” என டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் சமீபத்தில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, கடத்தல்கார்ர்களுக்கு “அதிகபடியான” தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில்  2.4 மில்லியன் பேர் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளதாகவும், கடந்த  2016ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 63,600 பேர் போதை பழக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.