சென்னை: பாஜக பெண் நிர்வாகியுடம் ஆபாசமாக பேசிய  ஆடியோ லீக்கானது தொடர்பாக கட்சியில் இருந்து தற்காலிக சஸ்பெண்டு செய்யப்பட்ட, திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான சூர்யா, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.  மேலும்  மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என  குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று பதிவிட்டுள்ளார்.
சூர்யா சிவாவின் இந்த பதிவு, அவர் கட்சியில் இருந்து விலகுவதை வெளிப்படுத்தி உள்ளது.சூர்யா சிவா கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரண், ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா செல்போனில் மோதி கொண்ட ஆபாச ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சூர்யா சிவா சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர், இருவரும் பேசி தாங்கள் அக்கா தம்பி என்று சமரசம் செய்துகொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  தற்போது தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து விட்டு திருச்சி சூர்யா கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார்.