சென்னை: மாண்டஸ்’ புயல் காரணமாக போக்குவரத்து துறை அரசு பேருந்துகளை இயக்குவதில் மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது. நேற்று, இன்று இரவு சென்னை உள்பட புயல் பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது. பின்னர், இன்று காலை பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவித்தது. இந்த நிலையில், இன்று மதியம், சென்னையில் மாநகர பேருந்துகள் இயங்காது என அறிவித்து உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக 3முறை மாற்றி மாற்றி தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் (இன்று) இரவு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு நேற்று மாலை அறிவித்து இருந்தது. பின்னர்,  தமிழகத்தில் இன்றிரவு அரசுப் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது.  இந்த நிலையில், தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என்று தெரிவித்துள்ளது.