சென்னை:

ல்வேறு தடைகளை மீறி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பத்மாவத் படத்துக்கு புது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பத்மாவத் இந்தி திரைப்படம், மொழிமாற்றம் செய்யப்பட்டு பல மாநிலங்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில்  ராணி பத்மாவதியை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக வட மாநிலங்களில் சில அமைப்புகள், படம் வெளியாகும் முன்பே எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை தடை செய்ய வேண்டும் என்று கலவரத்தில் ஈடுபட்டன. சில மாநில அரசுகள், இப்படத்தை வெளியிட அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்தன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை நாட, படம் வெளியாக அரசுகள் தடைபோடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே சென்சார் போர்டு அறிவுரையின்படி, பத்மாவதி என்பது பத்மாவத் என்று மாற்றப்பட்டது.

தற்போது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், “பத்மாவத் திரைப்படம் திருநங்கைகளை இழிவுபடுத்துவதாக உள்ளது” என்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து திருநங்கை ப்ரியாபாபு, “வரலாற்றில் வீரத்துக்கு பெயர் பெற்றவர் மாலிக்கபூர். இவர் ஒரு திருநங்கை. ,மாபெரும் வீரராக ,மதுரை வரை படையெடுத்து வந்து தன் வீரத்தை நிலையாட்டியவராக வரலாறுகளில் சொல்லப்படுபவர்.

ப்ரியா பாபு

ஆனால் பத்மாவத் படத்தில் இவரை வெறும் காமக்கிழத்தியாக மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  பொது புத்தியில் திருநங்கையர் குறித்த பதிவின் வெளிப்பாடே இது.

உண்மைகளை இலகுவாக தங்கள் கற்பனைக்கேற்ப காட்சிப் படுத்துவதை, “சுதந்திரம்” என்று திரைத்துரையினர் நினைக்கிறார்கள். இது சமூகத்தின் மீது திணிக்கும் வன்முறையே. ஒரு திருநங்கையாய் இதை கண்டிக்கிறேன்” என்று   ப்ரியா பாபு தெரிவித்துள்ளார்.

ப்ரியாபாபு, 2004ல்  தொடர்ந்த வழக்கின் பலனாகத்தான் திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்த்து.  ‘கண்ணாடி கலைக்குழு’  என்ற அமைப்பின் மூலம்,  திருநங்கைகளின் இன்னல்களை நாடக வடிவடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இவர்.  திருநங்கைகளை வைத்து இது வரை மூன்று ஆவணப்படங்கள் எடுத்திருப்பதோடு, மூன்று புத்தகங்களும் எழுதியுள்ளார்.