சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்  இலங்கை மக்களுக்கு உதவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி கோரியுள்ள நிலையில், திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சென்னை தலைமைச் செயலகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்   வழங்கினார்.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தி.மு.க சார்பில் ரூ.1 கோடியும்,தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அப்போது,  ,”எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம்.

அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம்.

மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.