சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது,  மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மற்ற சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. பாமகவுடன் கூட்டணி அமைக்கவும், சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டும் அதிமுக இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என பல சமூகங்கள் போர்க்கொடி தூக்கின.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு  சட்டத்தை எதிர்த்து, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.  அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக, தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் நடைபெற்றது. சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் இந்த வழக்கு எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்குகள் இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில்  வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வருவதால், அதைத் தடுக்கும் வகையில் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், வழக்கு நிலுவையில் உள்ளபோதே நியமனங்கள் நடைபெறுவதால் தடை விதிக்க வேண்டும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால், தடை விதிக்க அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்கக்கூடாது..?  என்று கேள்வி எழுப்பியதுடன்,  இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் நாளை (ஆக. 25) முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதி குறித்தும் நாளை முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.