சென்னை: தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு, தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மார்ச் மாதம் முதல் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகளை வழங்குவதற்கென ‘நம்ம பள்ளி திட்டம்’ என்னும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் 2022ம் ஆண்டு டிசம்பர் 19ந்தேதி தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள்(என்ஜிஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி(சிஎஸ்ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் நோக்கத்தில் ‘நம்ம பள்ளி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளத.  இதற்கான இணையதளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதையடுத்து தனியார் நிறுவனங்கள், அரசு சங்கத்தினர் என பல தரப்பினருக்கும் அதற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், மார்ச் மாதம் முதல்  தங்களது ஒரு  நாள் சம்பளத்தை நம்ம பள்ளி திட்டத்துக்கு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது.