வேலூர் :

திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான மாணவன் காவல்துறையிடம் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (வயது 52). இவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது, அவரது அறைக்குள் ஆவேசமாக வந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் ஹரிகரன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

படம்: சிகிச்சை பெறும் தலைமை ஆசிரியர் பாபு

காது மற்றும் வயிற்று பகுதியில் காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்ட பாபுவை பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கத்தி குத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.

கத்தியால் குத்திய ஹரிஹரன் பதினொன்றாம் வகுப்பு மாணவன். இவர் வேதியியல் தேர்வின் போது காப்பி அடித்தார். இதனால் அவரை தலைமை ஆசிரியர் பாபு கண்டித்தார். இந்த நிலையில்தான் அவரதை ஹரிஹரன் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.