திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே இருக்கும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தேரோட்டம். இந்த தேரோட்டம் இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது . வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், இதை அடுத்து முருகர் தேரும் விதி உலா செல்கிறது. இரண்டு தேர்களும் நிலைக்கு வந்ததும், பெரிய தேர் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் அணிவகுத்து வடம்பிடித்து தேர் இழுக்கிறார்கள்.

தேரோட்டத்தை முன்னிட்டு மாட வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று தரிசனம் செய்கிறார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்க இருக்கிறது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டும். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர் . சிறுமியர்கள் மட்டுமே இழுப்பார்கள்.

காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.