சென்னை,

நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத்தையொடிடி  இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பால்காவடி ஏந்தி வந்த பெண்கள் முருகனுக்கு வழிபாடு செய்தனர். இதன் காரணமாக வடபழனி பகுதியில் கடும் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோல, அறுபடை முருகன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி பல்வேறு வகையான காவடிகளை தூக்கிக்கொண்டும், ஆடிக் கொண்டும் முருகனை தரிசித்து வருகின்றனர்.

தைப்பூசம் மிகவும் எழுச்சியாக கொண்டாடப்படும் பழனி முருகன் கோவிலுக்கு வெளிமாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மலைமீது ஏற வசதியாக உள்ள  வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக கூட்டம் அலைமோதுவதால், சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல மலைமேலுள்ள ஆண்டியப்பனை தரிசிக்கவும் பல மணி நேரம் காத்திருந்து தரிசித்து வருகிறார்கள்.

தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயில் பாரவேல் மண்டபத்தில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

இன்று தைப்பூசத் திருவிழாவையொட்டி,  மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. இன்று மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால், வழக்கமான ஆறு கால பூஜைகளும் முன்கூட்டியே நடைபெறும் என்றும்,   மதியம் 2:45மணிக்கு சாயரட்சை பூஜை செய்து, 3:45மணிக்கு நடை சாத்தப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.