ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே 6 மணிநேரத்திற்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.  அதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் முதலில் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து நடந்த மோதலில் மற்றொரு பயங்கரவாதி பலியானார்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந் நிலையில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய முதற்கட்ட விசாரணையில், ஒருவர் உள்ளூர் தீவிரவாதி என்பதும் மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங் கூறியதாவது:  இருவரும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.