சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டெண்டர் முறைகேடுகளுக்கு உடந்தையாக இரந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்?  என மநீம கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டில் 4ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பபு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ”சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி, 7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.” இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான முறைகேட்டில் 4ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பு! தமிழகஅரசு அதிர்ச்சி…