கோவை: தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டார்.  6 நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். இதன் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதில் முக்கியமான நிறுவனமான சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழ்நாட்டின் பெருநகரங்களில் லூலூ ஹைபர் மார்க்கெட் திறக்க இருப்பபதாக கூறியது.

இதுகுறித்து கோவையில் வணிகர் சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர்  டைமன்ட் ராஜா வெள்ளையன் (வணிகர் சங்க தலைவர் வெள்ளையனின் மகன்) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் 39ஆம் ஆண்டு வணிகர் தின மாநாடாக  மே 5ந்தேதி நடத்த இருந்தோம். ஆனால், திடீரென  தலைவர் வெள்ளையனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இதற்கு பதிலாக மாவட்டந்தோறும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், வணிகர் சங்க கொடிகளை ஏற்றி இனிப்பு வழங்கி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனையின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இது சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளை நசுக்குகிறது. இதை முற்றிலும் நீக்க கடந்த இருபதாண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம்.

அன்னிய நாட்டு குளிர்பானங்களான, பெப்சி, கோக் ஆகியவற்றை தடை செய்ய வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் இதன் ஆதிக்கம், 85 சதவீதம் குறைந்துவிட்டது. 15 சதவீதம் மட்டும் நீடிக்கிறது அதையும் தவிர்க்க வேண்டும்.

அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள லுாலுா மால் நிறுவனம் தமிழகத்தில் முதன் முதலாக கோவையில் கால் பதிக்க உள்ளனர். அந்நிறுவனம், 25 ஏக்கரில் பிரம்மாண்ட வணிக வளாகங்களை ஏற்படுத்த உள்ளனர். இதன் வருகையால் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் லூலூ ஹைபர் மார்கெட் வந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க,  லுாலுா ஹைபர் மார்கெட் திறக்கப்பட்டால், தமிழகஅரசுக்கு எதிராக  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.