சென்னை: தமிழ்நாடு  என்பதை தமிழகம் என மாற்ற வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், #தமிழ்நாடு ஹேஷ்டேக்… சமூக வலைதளமான டிவிட்டரில் டிரென்டிங்காகி வருகிறது.  இன்றைய டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று (5ந்தேதி) நடைபெற்ற  காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களை  ஆளுநர் ஆர்.என். ரவி.  பாராட்டி  பேசினார்.

தொடர்ந்து பேசியவர், தமிழ்நாடு குறித்தும் சில கருத்துக்களை பேசினார். அப்போது,  தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.  எல்லாவற்றுக்கும் நாங்கள்  திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.   இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.   முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் .   ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன .  பாரதத்தின்  பகுதி  தமிழகம்.    பாரதத்தின் அடையாளம் தமிழகம் .  உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசினார்.

கவர்னர் ரவியின் தமிழகம் என்று சொல்வதுதான் என சரி என பேசியதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஆளுநரின் இந்த பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.  சமூக வலைதளங்களிலும் தமிழக ஆதரவாளர்கள் ஆளுநரின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இதை அடுத்து #தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்  டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆளுநரின் தமிழ்நாடு குறித்த பேச்சுக்கு  திமுக  எம்பி டி. ஆர். பாலு,  ஆளுநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் , திமுகவின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு  என்பது எங்கள் உரிமை, உணர்வு.. முழுமுதற் சங்கியாகிய தங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை ராசா என்கிறார்.அதுபோ திமுக எம்.பி. செந்தில்குமார், மேலும் கடுயைமான விமர்சனங்களை வைத்துள்ளார்.  திமுக எம்.பி. கனிமொழியோ,  ‘’நம் மொழி – பண்பாடு – அரசியல்-வாழ்வியலின் அடையாளம்  “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!’’என்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  ’’தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!’’என்று கூறியுள்ளார்.

இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் ஆட்சி காலம் அப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்றவர், தமிழ் மொழி மாநாடு திமுக ஆட்சியில் தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தவர் கலைஞர். இன்று பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டு தமிழர்களுடைய நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு என தெரிவித்தார். அதிமுகவும், தமிழ்நாடு என்பதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

ஆனால்,  தமிழக பாஜக  துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ’’நம் பண்பாடு-கலாச்சாரம்-வாழ்வியலின் அடையாளம் ‘இந்தியா’. சட்டமன்றத்தில் எந்த தீர்மானத்தை இயற்றினாலும் அதற்கு ஒப்புதல் அளிப்பது மத்திய அரசு. இது என்றும் இந்தியா தான்! இந்தியாவின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது மொழி வாரி மாநிலங்கள். தமிழ் நாடு என்றும் இந்தியாவில் தான்!’’என்று கூறியிருக்கிறார்.

அதுபோல சில தமிழ் ஆர்வலர்கள், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது திரிபு என்றால், தமிழை திராவிடம் என அழைப்பதும், தமிழர்களை திராவிடர்கள் என்று அழைப்பதும் திரிபுதானே என கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ்நாடு தனி நாடு இல்லை. எனவே, இது ஒரு மாநிலம் என்பதால் நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு என்பதற்கு ஆதரவாக, #தமிழ்நாடு ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரென்டிங்காகி வருகிறது.