சென்னை,

மிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டரில் குடுமிபிடி சண்டை போட்டுள்ளனர்.

கடந்த வாரம் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து சில கருத்துக்களை ரஜினி கூறினார். அவரது கருத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், ஒருசிலர் வரவேற்றும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம்: குஷ்பு  தமிழிசை இடையே சமூக வலைதளமான டுவிட்டரில் வார்த்தை போர் நடைபெற்றுள்ளது.

தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும்,  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கும் இடையே டுவிட்டரில் ரஜினியின் அரசியல் குறித்து கடுமையான விவாதம் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்று தொடர்ச்சியாக அழைத்து வரும் தமிழிசையை ட்விட்டரில் டேக் செய்து குஷ்பு வெளியிட்ட செய்தியில்,

“மேடம், கட்சியில் சேருவதெல்லாம் ஒருவருடைய கொள்கை அடிப்படையிலும், சுய உணர்வின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கடந்த 3 ஆண்டுகளாக வலது, இடது, சென்டர் என எல்லாத் திசைகளிலும் ரஜினியிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் காங்கிரஸில் சேர்ந்தது நான் விரும்பி எடுத்த முடிவு. என்னை காங்கிரஸில் சேருமாறு யாரும் தூது அனுப்பவில்லை. உங்களைப் பார்க்கும்போது நான் எடுத்த முடிவு சரி என்றே கருதுகிறேன்” என்றார்.

அதற்கு பதிலளித்த தமிழிசை, “காங்கிரஸில் சேர்ந்தீர்களா? அல்லது தாவினீர்களா? திமுகவில் சேர்ந்து காங்கிரஸுக்கு தாவியது எந்தக் கொள்கையின் அடிப்படையில் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களை காங்கிரஸில் சேர்க்க தூதுவர்கள் வரவில்லை. ஆனால் உங்களை திமுகவிலிருந்து விரட்ட ஆட்கள் இருந்தார்களே?” என்றார்.

இதற்கு பதில் அளித்த குஷ்பு, “உங்கள் மூளைக்கு கொஞ்சம் மீண்டும் வேலை கொடுத்து யோசித்துப்பாருங்கள் மேடம். நான் திமுகவிலிருந்து விலகி 6 மாதம் யோசித்து காங்கிரஸுக்கு சென்றேன். நீங்கள் காங்கிரஸி லிருந்து வெளியேறுகிறவர்களை அதே நாளில் பாஜகவில் சேர்த்துக் கொள்கிறீர்களே?. அதேபோல் நீங்கள் மற்றவர்கள் மனதை படிக்கக்கூடியவர்கள் என்றால் என்னுடைய கொள்கை என்ன என்பதை படித்துச் சொல்ல முடியுமா? அது உங்கள் கற்பனைகளிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது. உங்களை மிகவும் வருத்திக் கொள்ளாதீர்கள். அதேபோல் நான் திமுகவிலிருந்து வெளியேறும் போது நீங்கள் எனக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கவில்லை. உங்களைப் போன்ற ஒருவர் கிசுகிசுக்களை நம்புகிறவராக இருக்கிறாரே என்று எனக்கு வருத்தமாக உள்ளது” என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த தமிழிசை, “நான் மற்றவர்கள் மூளையில் உள்ளதை கணிப்பதில் சிறந்தவள். ஒரு மருத்துவராக என்னால் அதை சிறப்பாக செய்ய முடியும். நல்லவர்களை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது யாசகம் கேட்பது அல்ல. வார்த்தைகள் தான் ஒருவரின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன” என்றார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு, “உங்களுடைய கேள்விக்குதான் நான் பதில் சொன்னேன். இந்த விவாதம் எப்படித் தொடங்கியது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். செயல்களே ஒருவரின் சிந்தனைகளைத் தீர்மானிக்கின்றன” என்றார்.

இரு பெண் தலைவர்களின் டுவிட்டர் சண்டை தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.