மதுரை,

மிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.

சிவகாசியை சேர்ந்த பால கணேஷ் என்பவர், தமிழகத்தை  வறட்சி மாநிலம் என்ற அறிவிக்க கோரி துரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது,

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது.

விவசாய பயிர்கள் கருகியதால் மனமுடைந்து பல விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

மேலும் வாடிய பயிரை கண்டு மனவேதனையில் பலர் அதிர்ச்சியில் இறந்து வருகின்றனர்.

எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணம் அடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ. 50 ஆயிரம் வீதம் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

முதல் கட்டமாக உடனடியாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை வழங்க மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இந்த மனுவிற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறும் என்றனர்.